சிறுமியைத் தாக்கிய கரடி RCMP அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Maple Ridge பகுதியில் மூன்று வயது சிறுமியைத் தாக்கிய கரடியே RCMP அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக Conservation Officer Service தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி Maple Ridge பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத் தளத்தில் இருந்த மூன்று வயது சிறுமியை கருப்பு கரடி ஒன்று தாக்கியது. இதன்போது சிறுமியின் பெற்றோரில் ஒருவர் தலையிட்டு கரடியை விரட்டியடித்தார். காயமடைந்த சிறுமி விமான ஆம்புலன்ஸ் மூலம் B.C. Children’s Hospital-க்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்துக்குப் பின்னர் சுமார் 40 நிமிடங்களுக்குள் அதே பகுதியில் ஒரு கரடி பலமுறை காணப்பட்டதாக Maple Ridge RCMP தெரிவித்தது. அது சிறுமியைத் தாக்கிய அதே கரடி என நம்பிய அதிகாரிகள், மேலும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அந்தக் கரடியை சுட்டுக்கொன்றனர்.
ஆனால், சம்பவத்துக்குப் பின்னர் Conservation Officer Service மேற்கொண்ட ஆரம்ப மதிப்பீட்டில், சுட்டுக்கொல்லப்பட்ட கரடி சிறுமியைத் தாக்கிய கரடி அல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
தற்போது கூடுதல் விசாரணை, கிடைத்த ஆதாரங்களின் மறுபரிசீலனை மற்றும் DNA பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில், RCMP அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட கரடியே சிறுமியைத் தாக்கிய கரடி என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக Conservation Officer Service தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வேறு எந்த கரடியும் சுட்டுக்கொல்லப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முன்னதாக வழங்கப்பட்ட தவறான மதிப்பீட்டால் ஏற்பட்ட குழப்பத்திற்காக Conservation Officer Service மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவாக நடவடிக்கை எடுத்த RCMP அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து குணமடைந்து வரும் நிலையில், அவர்களுக்காக தங்களது எண்ணங்கள் இருப்பதாக Conservation Officer Service தெரிவித்துள்ளது.
மூலம்: CityNews Toronto / The Canadian Press
