பீபா 2026 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சீனாவுக்கு எதிரான சி குழு போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் அறிமுகமான இலங்கை வம்சாவளி தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை கோல் போட்டு அசத்தியுள்ளார்.
மெல்பர்ன் விக்டரி கழகத்தின் நட்சத்திர வீரரான 23 வயது நிரம்பிய நிஷான் வேலுப்பிள்ளை, போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மிச்செல் டியூக்குக்கு பதிலாக மாற்றுவீரராக பயிற்றுநர் டோனி பொப்போவிச்சினால் களம் இறக்கப்பட்டார்.
அவர் களம் நுழைந்த 7ஆவது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டார். இதன் பலனாக அவுஸ்திரேலியா 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நிகர கோல் வித்தியசாத்தை அதிகரித்துக்கொண்டது.
அவுஸ்திரேலிய உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் 2019இலிருந்து அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராக நிஷான் வேலுப்பிள்ளை பிரகாசித்துவருகிறார்.
இலங்கை வம்சாவழி என்ற வகையில் அவரது ஆற்றல்கள் குறிப்பாக தமிழ் சமூகத்தினரால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது.
அவரது ஆற்றல்கள் அவுஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் பாராட்டப்படுவதாக அறியக்கூடியதாக இருக்கிறது.
அறிமுகப் போட்டியிலேயே கோல் போட்டு அசத்தியதன் மூலம் நிஷான் வேலுப்பிள்ளைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிஷான் வேலுப்பிள்ளை புகுத்திய கோல், 2026 உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் அவுஸ்திரேலியா விளையாடும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா சார்பாக நிஷான் வேலுப்பிள்ளையை விட லூயிஸ் மில்லர், க்ரெய்க் கொட்வின் ஆகியோரும் சீனா சார்பாக ஸாங் யூனிங்கும் கோல்களைப் போட்டனர்.