காட்டு யானைகளை நெருப்பினால் விரட்டும் சிறுவர்கள் ; வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட புற நகர்  பகுதிகளில்  தற்போது வழமையாகி விட்டது.

இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த கல்முனை சாய்ந்தமருது மற்றும்  நற்பிட்டிமுனை  பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு  யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்க்கும் நிலையில்   யானைகளை சிறுவர்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குறித்த பிரதேச  வயல் வெளி பகுதியில்  தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் 08 முதல் 10 வரை வருகை தந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகள் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்நுழைவதுடன் அவ் யானைகளை  சிறுவர்கள் விரட்டும்  நடவடிக்கையில்  கடந்த சில தினங்களில் ஈடுபட்டதை காண முடிந்தது.

கல்முனை மாநகர எல்லை பிரிவில்  சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கீறின் பில்ட்  தொடர்மாடி குடியிருப்பு பகுதி மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொலிவேறியன் குடியிருப்பு வீட்டு திட்ட பகுதியை அண்மித்த வயல் வெளியில்  காட்டு யானைகளின் வருகை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இரவு , பகல் நேரங்களில் குறித்த குடியிருப்பு பகுதிகளில்  காட்டு யானைகள் வருகை தரும் நிலையில் உள்ளதாகவும்  இதனால் மிகவும் அச்ச நிலையில்  தாம் வசித்து வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது  தொடர்பில் பொறுப்புவாய்ந்தவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், வயல் வெளிகளில்  சஞ்சரித்து காணப்படும் குறித்த  காட்டு யானை கூட்டத்தினை  காண்பதற்காய்  பிற்பகல் வேளையில் பொது மக்கள்  வருகை தந்து பார்வையிட்டு செல்வதனை காணக்கூடியதாய் உள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர்  காரைதீவு ,மாவடிப்பள்ளி, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில்  மக்கள் வாழும் பகுதிகளில் காட்டு யானைகள் வருகை தந்து உடமைகளுக்க்கு சேதம் விளைவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். இதுவரை இவ்வருடத்தில் மாத்திரம்   அம்பாறை மாவட்டத்தில் சமகாலத்தில் மூவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் காட்டு யானைகள் இறப்பதும், காட்டு யானைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் கடந்த ஆண்டு முதல் 8 மாதங்களில் 340 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இவ்வருடம் இதே காலப்பகுதியில் 239 காட்டு யானைகள் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு முதல் எட்டு மாதங்களில் காட்டு யானைகளின் தாக்குதலால் 117 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 90 ஆக குறைந்துள்ளது.

யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வயல் நெல் அறுவடை முடிந்தால் இவ் பிரதேசங்களில் யானைகளின் வருகை  தொடர்கதையாகவே உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc