நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம் - நெரஞ்சன் டி சில்வா தேவா ஆதித்ய

ஒரு நாடு நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு, முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அந்நாட்டில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் நெரஞ்சன் டி சில்வா தேவா ஆதித்ய தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சரிந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த சரியான மற்றும் துணிச்சலான தீர்மானங்களினால் இலங்கை இதுவரை பல சாதனைகளைப் புரிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் நெரஞ்சன் டி சில்வா தேவா ஆதித்ய இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி அரசியல்வாதியாக விளங்கிய நெரஞ்சன் டி சில்வா தேவா ஆதித்யா, பிரித்தானிய பாராளுமன்றத்தின் முதலாவது இலங்கை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அபிவிருத்திக்கான முன்னாள் துணைத் தலைவருமாவார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் நெரஞ்சன் டி சில்வா தேவா ஆதித்ய மேலும் கூறியதாவது:

‘‘ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து வேலைத் திட்டத்தை ஆரம்பித்து, நாட்டின் நிதித்துறையை பலப்படுத்தவும் துணிச்சலுடன் செயற்பட்டார். அதில் அவர் பெரிய சாதனைகளை படைத்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அப்பால் சென்று, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஜனாதிபதி 94 சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

நான் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருந்தபோது, ஐந்து ஆண்டுகளில் சுமார் 80 சட்டமூலங்களை நிறைவேற்ற முடிந்தது. அந்தச் சூழலில் இது ஒரு சாதனை என்றே கூறவேண்டும்.

நல்லாட்சி, டிஜிட்டல் நவீனமயமாக்கல், ஊழல் எதிர்ப்பு, நிதி மேலாண்மை மற்றும் அரச கடன் மேலாண்மை போன்ற முக்கியமான பகுதிகளை உள்ளடக்கிய புதிய சட்டங்களை ஜனாதிபதி உருவாக்கினார்.

அதேபோன்று, முறையற்ற விதத்தில் பெறப்பட்ட சொத்துக்களை மீட்பது, தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துதல், பெண்களை வலுவூட்டல் மற்றும் பொதுப் பயன்பாடுகள், வங்கி, விமான சேவைகள் மற்றும் மீன்வளம் உள்ளிட்ட துறைகளை மறுசீரமைக்க புதிய சட்டங்களை ஜனாதிபதி அறிமுகப்படுத்தினார். இந்தத் துறைகளில் வியட்நாம், கம்போடியா, இந்தியா போன்ற நாடுகளை விட பின்தங்கியுள்ள இலங்கைக்கு மிகவும் அவசியமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கக் கூடியவாறு சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பொருளாதார பரிமாற்றச் சட்டம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

ஒரு நாட்டிற்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதே அதற்கான காரணமாகும். அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு திட்டமிடக்கூடியவாறு இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் முதலீடுகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இருப்பதை உணர வேண்டும்.

2050ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவது ஒரு இலக்காகும். 2027ஆம் ஆண்டளவில் வருடாந்த பொருளாதார வளர்ச்சியை 5% ஆக அதிகரிக்க வேண்டும். இந்த இலக்குகளுடன் இலங்கையின் நீண்ட கால அபிவிருத்திக்கான அடித்தளத்தை இடுவதற்கு பொருளாதார மாற்றச் சட்டம் வழிவகுக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டம் இலங்கையில் முதலீட்டு சூழலை மேம்படுத்தி, நிலையான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதாகும். இதன்மூலம், நாட்டின் பிரதான தொழில்களான விவசாயம் ஆகியவற்றை நவீனமயப்படுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் இலங்கைக்கு போட்டிமிகு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் எனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது இலகுவான பணியல்ல. குறிப்பாக அதிக போட்டி நிறைந்த உலக சந்தையில். வெளிநாட்டு முதலீடு வெற்றிகரமாக இருக்க, முதலீட்டாளர்களுக்கு ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்க வேண்டும், இதனால் அவர்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடியும். ஒரு நாடாக நாம் சரியான நிலைமைகளை முன்வைக்க வேண்டும்.

முதலீட்டாளர்கள் குறிப்பாக வருமானத்தை மட்டுமல்ல, ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையையும் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் பணத்தை நிலையற்ற வங்கியில் வைக்க விருப்பமாட்டீர்கள். இதுபோல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நீண்ட கால பாதுகாப்பு கொண்ட நாடுகளை மட்டுமே தெரிவு செய்கிறார்கள்.

இலங்கைக்கு அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், துறைமுக நகரங்கள் தொடர்பான அண்மையில் நிறைவேற்றப்பட்ட வங்கி மற்றும் நிதி ஒழுங்குமுறைகளும் முக்கியமானதாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வையும் தலைமைத்துவமும் இலங்கையை உலகில் சிறந்த நாடாக மாற்றும் என நான் நம்புகிறேன்.’’ என்றார்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc