வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மோட்டர் சைக்கிள்கள் மீட்பு: ஏழு இளைஞர்கள் கைது!

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று சனிக்கிழமை (10) மூன்று மோட்டர் சைக்கிள்கள் மீட்கபட்டுள்ளதுடன்,  ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்  தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை அதிகாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா  பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது  சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் கைது செய்யப்படட்டனர்.  அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

வவுனியா,  பூந்தோட்டம்        பகுதிகளைச் சேர்ந்த  இளைஞர்    ஒருவர் கடந்த புதன்கிழமை மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது பிறந்தநாள் நிகழ்வினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

அந்த நிகழ்வுக்காக  அங்கு  உறவினர்கள்,  நண்பர்கள் என பலர் வந்திருந்தனர். அங்கு வந்த அவரது சில நெருங்கிய நண்பர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

இதன்போது,  பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பிப்பதற்காக  நண்பர்கள்,  இளைஞர் குழுக்களாக பாட்டுப்பாடி  நடனம்  ஆடினார்கள்.

இந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த நெருங்கிய நண்பர்கள் பிறந்தநாள் நிகழ்வுக்காக வந்த  பெண் நண்பிகளுடன்  சேர்ந்து நடனமாட முற்பட்ட வேலை  பிறந்தநாள் கொண்டாடிய நண்பன் அதனை அனுமதிக்காது தடுத்துள்ளார்.

இதனால்  நெருங்கிய நண்பர்கள்  மற்றும்  இளைஞர் குழுக்களுக்கிடையில்  மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனை அங்கு இருந்த உறவினர்கள்  சமரசம் செய்து வைத்துள்ளனர்.

அதன் பின்னர்  வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய  இளைஞனை கடத்தி  சென்று குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து     கடுமையாக கொலை  வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாழடைந்த  வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து விட்டு கடத்தியவர்கள் தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட  இளைஞனை மீட்டு அவரை  வவுனியா மாவட்ட  பொது வைத்தியசாலையில் பாெலிஸார் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 20 வயது தொடக்கம் 22 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பட்டைகாடு பகுதியைச் சேர்ந்த 3  பேரும், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் கோயில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட   மூன்று   மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மோட்டார்  சைக்கிள்களையும் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc