கிழக்கு மாகாணத்தில் 170 கோடி ரூபா நிதி மோசடி ; விசாரணைகளின் முன்னேற்றத் தன்மை என்ன ? - சாணக்கியன் கேள்வி!

கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்துள்ள கேள்விகள் இன்று வரை இழுபறி நிலையில் உள்ளது. ஒன்று பதிலளியுங்கள் , இல்லையேல் வாய்மூல விடைக்கான வினாக்கள் முறைமையை இரத்து செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (07)  இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில்,  ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பகுதிகளில் 2014.02.05 ஆம் திகதி முதல் ப்ரிவெல்த் க்ளோபல்  பிரைவட் லிமிடெட் எனும் பெயரில் நிதி நிறுவன் ஒன்று நடத்திச் செல்லப்பட்டதா? அந்நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஹமட் செரீம் முஹம்மது சிஹாப் மற்றும் பாத்திமா பர்ஸானா மார்கார் ஆகியோர் சுமார் 1400 பேரின் 170 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை மோசடி செய்துள்ளார்கள் என்பதையும், மேற்குறிப்பிடப்பட்ட பணியாளரும் அவரது குடும்பத்தினரும் இன்று வரை இந்தியாவில் தலைமறைவாகி இருப்பதையும் இது தொடர்பில் கல்முனை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவாரா?

இவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர எடுக்கப்படும்  நடவடிக்கைகள் என்னவென்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா ?  என கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்  சார்பில் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க 3 மாதங்கள் காலவகாசம் கோரினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இந்த கேள்விகளை 2020 செப்டெம்பர் மாதம் கேட்டேன். நடுத்தர மக்களின் 170 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின்  பணிப்பாளர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக  குறிப்பிடப்படுகிறது.பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் முறையிட்டு பாராளுமன்றத்தின் ஊடாக பதிலை எதிர்பார்த்துள்ளார்கள்.

2020 முதல் இன்று வரை மூன்று தடவைகள் இந்த கேள்விகளை தொடர்ந்து சமர்ப்பித்துள்ளேன்.ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை.மக்கள் மத்தியில் செல்லும் போது பாதிக்கப்பட்டவர்கள் எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள்.தொடர்ந்து தாமதப்படுத்துவதால் நாங்களும் இதில் தொடர்புப்பட்டுள்ளோம் என்று பாதிக்கப்பட்டவர்கள சந்தேகிக்கப்படுவார்கள்.

முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் பற்றி கேட்கும் போது அதற்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையற்றது. ஆகவே சபாநாயகர் இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனஇ'நீங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடளித்தீர்களா'என்று கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம். வெளிவிவகாரத்துறை  அமைச்சின் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு  இவ்விடயங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை முன்னேற்றகரமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

இலங்கை பொலிஸார் இவ்விடயத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்து பிடியாணை உத்தரவை பெற்றுக்கொண்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று இந்திய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். ஆகவே இவ்விடயத்தில் உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, இது பாரிய நிதி மோசடியாகும் 170 கோடி  ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே இந்த விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றத்தன்மை தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இவ்விரு நாட்களுக்குள் அறிவிக்கிறேன் என்றார்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc