Bootstrap

சம்மாந்துறையில் வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அம்பாறை (Ampara) - சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளவரின் நியமனத்தை இரத்து செய்யக்கோரி அமைதி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (03.06.2024) காலை 8.30 மணி முதல் 9.45 மணிவரை சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

அமைதிப் போராட்டம்

இவ்வாறு அமைதிப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி போராட்டம் பொதுப்போக்குவரத்து மற்றும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளின் வருகைக்கு தடையாக அமையும் என்பதால் போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுக்கு அமைவாக நீதவானின் தடையுத்தரவு வாசிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

இதனிடையே இன்று முற்பகல் 11 மணியளவில் புதிய வலயக்கல்வி பணிப்பாளர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்கு எதிராக சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்குமாறு நேற்று (05) இரவு துண்டுப்பிரசுரமொன்றின் மூலமாக கோரப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக பொலிஸார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் அதிகாரி நியமனம்

இந்த போராட்டம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.மாஹீர், சம்மாந்துறை சூறா சபையின் தவிசாளர் டொக்டர் ஏ.எம்.ஏ.றஸீட் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,

“ நாங்கள் தமிழ் அதிகாரி நியமனம் செய்தமையை எதிர்க்கவில்லை. சம்மாந்துறையில் நீர்ப்பாசன திணைக்களம், தொழில்நுட்பக் கல்லூரி, மல்வத்தை கமநல மத்திய நிலையம் ஆகியவற்றில் பொறுப்பதிகாரிகளாக தமிழ், சிங்கள அதிகாரிகள் உள்ளனர்.

ஆனால், இவரை எதிர்ப்பதற்கு காரணம், இவர் திறமையற்றவர். இவரை அவரது பிரதேச மக்களே திறமையற்றவர் என்று வேண்டாமென்று தெரிவித்த நிலையில் சம்மாந்துறைக்கு நியமனம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனங்கள், அந்த வலயங்களில் உள்ள பெரும்பான்மையினத்திற்கு அமைவாகவே இதுவரை நடைபெற்று வந்துள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வலயங்களுக்கு தமிழ் அதிகாரியும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள வலயங்களில் சிங்கள அதிகாரிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வலயங்களில் முஸ்லிம் அதிகாரிகளும் கல்விப் பணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நடைமுறை சம்மாந்துறையிலும் பின்பற்றப்பட வேண்டும். சம்மாந்துறை வலயக் கல்வி பிரதேசம் 90 வீதம் முஸ்லிம்களை கொண்டதாகும்.

கிழக்கு மாகாண ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கின்றார். அவர் கிழக்கு மாகாணத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அதனால் ஜனாதிபதி அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளனர்.

 

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc