இந்திய மாகாணம் குஜராத்தில் கேளிக்கை விடுதியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறார்கள் உட்பட 27 பேர்கள் பலியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 பேர்கள் உடல் கருகி பலி
குஜராத் மாகாணத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் gaming zone அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர். இந்த நிலையில், தொடர்புடைய கேளிக்கை விடுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 9 சிறார்கள் உட்பட 27 பேர்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்கள் கருகியுள்ளதால் அடையாளம் காண்பது சிக்கலாக உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட gaming zone-ன் உரிமையாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் Darshita Shah தெரிவிக்கையில், ராஜ்கோட் வரலாற்றில் gaming zone-ல் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பது இதுவே முதல் முறை.
அரசு நடவடிக்கை எடுக்கும்
அலட்சியத்தால் இந்த அவலத்திற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோர் தொடர்புடைய சம்பவம் குறித்து தங்களது அதிர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.