விழிப்புலனற்ற வேலையில்லாத பட்டதாரிகளுக்கு விசேட செயற்திட்டம் ஊடாக விரைவாக அரச வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என விழிப்புலனற்ற பட்டதாரியான விஜயகுமார் விஜயலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரியுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் எனது பட்டப்படிப்பை முடித்து சுமார் நான்கு ஆண்டு கால பகுதிக்கு மேலாக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.
படிக்கும் காலத்தில் நாம் மற்றுமொருவரின் உதவியுடன் பல தடைகளை தாண்டிய கற்று, பட்டதாரி ஆனேன். இன்றும் நான் மற்றவர்களின் உதவியுடன் ஒரு தங்கி வாழ்பவனாக வாழ்கிறேன். நான் மாத்திரமின்றி என்னை போல விழிப்புலனற்ற மற்றும் விசேட தேவையுடைய பட்டதாரிகள் பலரும் வேலை வாய்ப்புகள் இன்றி காணப்படுகிறனர்.
நாம் சுயதொழில் செய்யும் நோக்குடன் வங்கிகளில் கடன் பெற முனைந்த போது, நிரந்தர வேலையற்ற நமக்கு கடன் தர முடியாது என வங்கிகள் மறுத்து விட்டன. தனியார் துறைகளுக்கு சென்றால் நீங்கள் பட்டதாரிகள் உங்களுக்கு அரசாங்கம் வேலை தர நீங்கள் இந்த வேலையில் இருந்து விலகி அரச வேலைக்கு சென்று விடுவீர்கள் என கூறி அவர்களும் வேலை தர மறுக்கின்றார்கள்.
எங்களால் அரச திணைக்களங்களின் வேலை செய்ய முடியும், குறிப்பாக தொலைத்தொடர்பு இயக்குனர்களாக , கணனி வேலை செய்பவர்களாக தரவு சேமிப்பாளர்களாக எம்மால் பணியாற்ற முடியும்
கணனி திரையில் என்ன இருக்கிறது என்பதனை எம்மால் பார்க்க முடியாதே தவிர, எம்மால் கடிதங்கள் தட்டச்சு செய்வதற்கு , மின்னஞ்சல்கள் அனுப்புவதற்கு, தரவுகளை சேமிப்பதற்கு என கணனியில் பல வேலைகளை செய்ய முடியும், விழிப்புலனற்றவர்களுக்காக தொழினுட்ப வசதிகள் பல வந்துள்ளன. எனவே எம்மால் திணைக்களங்களின் பணியாற்ற முடியும்.
எமக்கான வாய்ப்புக்களை தாருங்கள். நாம் தொடர்ந்தும் தங்கி வாழ்பவர்களாக வாழ விரும்பவில்லை. எமக்கு அரச வேலை வாய்ப்பு கிடைத்தால் நாம் எமது ஊதியத்தில் வாழ முடியும் என தெரிவித்தார்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைகளை விரைந்து தர நடவடிக்கை எடுக்கப்படாவிடின், வடக்கில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கிருஸ்ணராஜா டனிசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் பட்டப்படிப்பை முடித்து 3 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் எமக்கான வேலை வாய்ப்புக்களை இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பில் எமது கருத்துக்களை நாடாளுமன்றி்ல் பேச வேண்டும் என வடக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து மகஜர்களையும் கையளித்துள்ளோம்.
ஜனாதிபதியின் யாழ். வருகையின் போது, அவரை நேரில் சந்திக்க முயற்சித்தோம். அது எமக்கு பயனளிக்கவில்லை. இருந்த போதிலும் ஜனாதிபதி செயலக அதிகாரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவரிடம் எமது கோரிக்கைகளை முன் வைத்தோம். எமது பட்டதாரிகளின் தரவுகளை தருமாறு கோரியுள்ளார். அவரிடம் அவற்றை கையளிக்கவுள்ளோம்
எமக்கு ஏதாவது ஒரு பொறிமுறையினை ஏற்படுத்தி வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அது எமது கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும்.
தமிழ் பாட , அரசறிவியல் பாட பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வழங்குவதால் பயனில்லை. அவர்கள் பெற்ற பட்டத்திற்கு ஏற்ப அவர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.
அதேவேளை எமது கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். 20 வயதிற்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்ய கூடியவாறு அந்த கல்வி சீர்த்திருத்தம் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் 25 வயதிற்கும் பட்ட மேல் படிப்புக்களை கூட முடித்து விடுவார்கள்.
நாம் 25 வயதில் முதல் பட்டப்படிப்பையே முடிக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே கல்வியில் சீர் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கோரினார்