Bootstrap

புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ள அரசு

கனடா அரசின் ஒரு நடைமுறை, புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடைமுறையே CRS என்னும் நடைமுறை.

இரண்டு வாரங்களுக்கொருமுறை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, CRS தரவரிசையை வெளியிடுகிறது. அது வெளியிட்டுள்ள புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டையைப் பெறுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு நிணயித்த CRS புள்ளிகள் 540 மற்றும் அதற்கும் அதிகம். மூன்று ஆண்டுகள் நீடிக்கும் post-graduate work permit (PGWP) வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் இந்த புள்ளியை எட்ட தகுதிபெறவில்லை என்கிறார் புலம்பெயர்தல் ஆலோசகரான Manan Gupta.

மார்க் மில்லர் புலம்பெயர்தல் அமைச்சரானதைத் தொடர்ந்து, 2023இல் காலாவதியாகும் அனுமதிகள் நீட்டிக்கப்படாது என்று கூறியிருந்தார் அவர். அப்படிப்பட்ட சூழலில் இப்படி ஒரு உயர் CRS புள்ளி வரம்பு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார் Manan Gupta.

இந்தியாவிலிருந்து 2020ஆம் ஆண்டு கல்வி கற்க கனடாவுக்கு வந்தவர் கனிகா மஹேஷ்வரி (29). படித்து முடித்து, நகைத்தொழில் ஒன்று துவங்கவேண்டும் என்பது அவரது கனவு.

அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு அலுவலகத்தில் வேலை செய்துவரும் மஹேஷ்வரி, வர்த்தகம் செய்யும் தனது கணவருடன் இணைந்து நகைக்கடை திறப்பதற்காக பணம் சேமித்துவருகிறார்கள்.

ஆனால், ஆகத்து மாதத்தில் அவரது பணி உரிமம் காலாவதியாக உள்ளது. உயர் CRS புள்ளி வரம்பு நியமிக்கப்பட்டுள்ளதால், நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள அவருக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அவர் பெற்றுள்ள புள்ளிகள், அந்த வரம்பை எட்ட முடியாத தூரத்தில் உள்ளன.

ஆகவே, தனது கனவு கலையும் நிலையில் உள்ளது தனக்கு தெளிவாகப் புரிவதாக தெரிவிக்கிறார் மஹேஷ்வரி. நான் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பவேண்டும் என்றால், நான்கு ஆண்டுகளாக நான் செய்த வேலை, செலவு எல்லாம் வீணாகிப்போகும், எனக்கு மட்டுமல்ல, என் உதவியை எதிர்பார்த்திருக்கும் என் மொத்தக் குடும்பத்துக்கும் அது பெரும் இழப்பு என்கிறார் மஹேஷ்வரி.

 

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc