மணல் கொள்ளை - மன்னாரில் மணல் அகழ்வு தொடர்பான மாவட்ட செயலக விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில்  இடம் பெறும் மணல் அகழ்வு சம்பந்தமான விசேட கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை(10) மாலை  மன்னார்  மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள  ஐந்து பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சுற்றுச்சூழல் தொடர்பான அமைப்புகளின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் மற்றும் பிரஜைகள் குழுவின் தலைவர், கடற்படையினர் ,பொலிசார் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டபூர்வமான மற்றும் சட்ட விரோதமான மணல் அகழ்வு சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் சிலவற்றை தற்காலிகமாக இடை நிறுத்துவது என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மணல் அகழ்வு செய்யப்படுகின்ற இடங்களை கள விஜயம் மேற்கொண்டதன் பின்னர் அனுமதி வழங்குவது என்றும்  தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான மண்அகழ்வு இடம்பெற்று வருவதாகவும்  இச் சட்டவிரோத மண் அகழ்வு மக்களுக்கு பாரிய இடையூறாக இருப்பதாகவும் பொது மக்களின் குற்றசாட்டுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதே நேரம் வெளி மாவட்டங்களில் இருந்து தனி நபர்களால் மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனை தடுப்பதற்காக சில திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பதாகவும் அத்தோடு அவர்களுக்கான  அனுமதி பத்திரங்களை உடனடியாக  ரத்து செய்வதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு வேறு திணைக்களங்களால் வழங்கப்படுகின்ற அனுமதி பத்திரங்கள் அனைத்தும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் குழுவினால் மேற்பார்வை செய்யப்பட்டதன் பின்னரே அவ்விடங்களில் அனுமதி வழங்க முடியும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மண்அகழ்வு போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வேறு மாவட்டத்தில் இருந்து வழங்கும் போது  A32 பாதையில் அனுமத்திரம் வழங்க முடியாது எனவும் இவ்வாறு வழங்குவதால் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத மண் அகழ்வை தடுப்பதற்கு பொலிசார் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc