உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: இந்தியா அறிவிக்க முன்னரே இலங்கை அறிந்திருந்ததா?

எப்.அய்னா

கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. இந்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களால், 30 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 268 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 27 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 594 பேர் காய­ம­டைந்­தனர்.

இந்த பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்த பூரண புதிய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இத்­த­கைய தாக்­கு­த­லொன்று நடாத்த திட்­ட­மி­டப்­ப­டு­வ­தாக இந்­தி­யாவில் இருந்து அப்­போ­தைய தேசிய உளவுத் துறை பணிப்­பாளர் நிலந்த ஜய­வர்­த­ன­வுக்கு கிடைக்கப் பெற்­ற­தாக கூறப்­படும் தகவல், அதற்கு முன்­னரே அவ­ருக்கு அவரின் கீழ் செயற்­பட்ட அதி­கா­ரிகள் ஊடாக சேக­ரிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டி­ருந்­ததா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. அவ்­வாறு இலங்­கையின் எஸ்.ஐ.எஸ். எனப்­ப‌டும் தேசிய உளவுத் துறை ஊடாக சேக­ரிக்­கப்­பட்ட தகவல், எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காது அந்த உள­வுத்­து­றையின் உயர் மட்­டத்தால் மூடி மறைக்­கப்­பட்­டதா என்ற‌ கேள்வி புதிய விசா­ர­ணை­களில் எழுந்­துள்­ளது.

சஹ்ரான் ஹாஷீம் கும்­ப­லோடு உள்­நாட்டில் உள­வுத்­து­றை­யினர் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்த நெருக்கம் மற்றும் உறவு உள்­ளிட்­டவை தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அது குறித்து சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குறிப்­பாக, 2018 நவம்பர் மாதம் மட்­டக்­க­ளப்பு, வவு­ண­தீவு பகு­தியில் இரு பொலி­ஸாரை கொலை செய்து அவர்­களின் ஆயு­தங்­களை சஹ்ரான் கும்பல் கொள்­ளை­யிட்­டமை 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் விசா­ர­ணையில் வெளிப்­பட்­டது. எனினும் அது­வரை அக்­கொ­லைகள் விடு­தலைப் புலி ஆத­ர­வா­ள‌ர்­களால் செய்­யப்­பட்­ட­தா­கவே காண்­பிக்­கப்­பட்­டது. அவ்­வாறு காண்­பிப்­ப­தற்­காக போலி­யான சான்­று­களை உரு­வாக்க அரச உளவுச் சேவை மற்றும் இரா­ணுவ உள‌வுப் பிரிவு ஆகி­யவை முன்­னின்று செயற்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இரா­ணுவ உளவுப் பிரிவு அப்­போது குறித்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த சி.ஐ.டி. அதி­கா­ரி­களை திசை திருப்ப வழங்­கிய உளவு அறிக்­கைகள் இது தொடர்­பி­லான சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

அதன்­படி இடம்­பெறும் புதிய விசா­ர­ணை­களில் தற்­போது, குறித்த பொலி­ஸாரின் கொலையை திசை திருப்ப ஜக்கட் ஒன்று அடங்­கிய பாட­சாலை பையை சம்­பவ இடத்­துக்கு அருகே மறைத்து வைத்து நாட­க­மா­டி­யமை தொடர்­பி­லான விட­யத்­துக்­காக அரச உளவுச் சேவையின் மட்­டக்­க­ளப்பு பிராந்­தி­யத்தில் கட­மை­யாற்­றிய பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலின் கீழ் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்றார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்­டபிள் உள்­ளிட்டோர், குறித்த ஜக்கட் மீட்­கப்­பட முன்­னைய நாள், அப்­போதும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பினர் ஒரு­வரின் வீட்­டுக்கு தேடுதல் எனும் பெயரில் சென்று அதனை எடுத்­தி­ருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. பின்னர் அது வவு­ண­தீவு பொலிஸார் கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு அருகே மறைத்து வைக்­கப்­பட்டு, அது தொடர்பில் சி.ஐ.டி.அதி­கா­ரி­க­ளுக்கும் அரச உளவுச் சேவை­யி­னா­லேயே தக­வலும் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்த விசா­ர­ணை­களில் பல்­வேறு தக­வல்கள் அம்­ப­ல­மாகி வரு­கின்­றது.

இது ஒரு புறம் இருக்க, அண்­மையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் அடிக்­கடி உச்­ச­ரிக்­கப்­பட்ட ஒரு புனைப் பெயரைக் கொண்ட உளவுத் துறை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரிடம் சிறப்பு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அந்த விசா­ர­ணை­களின் பின்னர், இந்­தியா தகவல் வழங்க முன்­னரே சஹ்ரான் கும்பல் தாக்­குதல் நடாத்தப் போகும் தக­வல்கள் இலங்கை உளவுத் துறை­யிடம் இருந்­தது என நம்பும் வண்­ண­மான சில தக­வல்கள் வெளிப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் தொடர்ச்­சி­யான விசா­ர­ணைகள் நடக்­கின்­றன.

குறிப்­பாக சஹ்ரான் கும்பல் தாக்­குதல் ஒன்­றுக்கு தயா­ரா­வது குறித்த உளவுத் தகவல் சேக­ரிக்­கப்­பட்டு தேசிய உளவுத் துறையின் உயர் அதி­காரி ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்ட பின்னர் அதற்கு அப்பால் அந்த தகவல் தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்­பது முடக்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது குறித்து தற‌்­போது மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

இவ்­வா­றான பின்­ன­ணியில் தான் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுடன் இலங்­கையின் தேசிய உளவுத் துறைக்கும், இரா­ணுவ உளவுப் பிரி­வுக்கும் மிக நெருங்­கிய தொடர்­புகள் இருக்­கின்­றன என்ற குற்­றச்­சாட்டு வலுத்து வரு­கின்­றது.

இலங்­கையின் உளவுத் துறை, இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளோடு தொடர்­பு­பட்­டது என்­பதை நம்­பு­வ­தற்­கான மற்­றொரு முக்­கிய ஆதா­ரமே குண்­டு­தாரி ஜமீல். 2015 ஆம் ஆண்டு முதல் ஜமீல் தொடர்பில் உளவுப் பிரி­வுகள் கவனம் செலுத்தி வந்­துள்­ள­தாக‌ ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் தெரி­ய­வந்­தது. இந்த தாக்­கு­த­லுக்கு முன்னர் ஜமீல் தொடர்பில் ஆராய்தல்/ விசா­ரணை செய்தல்/ கண்­கா­ணித்தல் ஆகி­யன, அரச உளவுச் சேவை, இரா­ணுவ உளவு பணிப்­பாளர் சபை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் குறித்த விசா­ரணை பிரிவு ( டி.ஐ.டி.) ஆகிய நிறு­வ­னங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அவ்­வாறு ஜமீல் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டாலும், அவர் மூலம் இந்தத் தாக்­குதல் குறித்த முன்­கூட்­டிய எச்­ச­ரிக்­கை­களைப் பெற்­றுக்­கொள்­ளவோ அல்­லது தாக்­கு­தலைத் தடுக்­கவோ முடி­யாமல் போயுள்­ள­மை­யா­னது உளவுத் துறை­களின் செயற்­பாடு தொடர்பில் பாரிய சந்­தே­கங்­க­ளுக்கு வழி வகுக்­கின்­றது.

கடந்த 2019 ஏப்ரல் 20 அன்று மாலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் ஒரு அறையை முன்­ப­திவு செய்­தி­ருந்தார். 2019 ஏப்ரல் 20 அன்று நள்­ளி­ரவு 12 மணிக்குள் முன்­ப­திவு செய்­யப்­பட்ட அறை­களின் பட்­டி­யலை குறித்த ஹோட்­டலின் பாது­காப்பு முகா­மை­யாளர் 21 ஆம் திகதி காலை அரச உளவுச் சேவை மற்றும் ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரி­வுக்கும் அனுப்­பி­யி­ருந்தார். அதன்­படி, அரச உளவுச் சேவை அன்று காலை, இந்தப் பட்­டி­யலில் தாம் தகவல் சேக­ரித்­து­வரும் ஜமீல் இருந்­ததை அடை­யாளம் காணாமை அல்­லது கண்டும் காணாமல் இருந்­தமை மிகப் பெரும் கேள்­வி­யாக உள்­ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று காலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்­ட­லுக்குத் திரும்பி (குண்டு வெடிக்­கா­த­தாலோ அல்­லது வேறு ஏதேனும் கார­ணத்­தாலோ) ஹோட்­டலை விட்டு வெளி­யே­று­வ­தற்கு சற்று முன்பு, காலை 8.51 மணிக்கும் 8.54 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில், அவ­ருக்கு தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தமை சிசி­டிவி கெமரா பதி­வு­களில் உள்­ளது. அவ்­வாறு ஜமீ­லுக்கு அழைப்­பினை எடுத்த அந்த நபர் யார் என்­பது இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில், பிள்­ளையான் எனும் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்­தனின் ஊடகப் பேச்­சா­ள­ராக இருந்த அசாத் மெள­லான செனல் 4 தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்டில் கூறிய விட­யங்­க­ளோடு இந்த தொலை­பேசி அழைப்பை ஒப்­பீடு செய்யும் போது அது இரா­ணுவ உள­வுத்­து­றையின் ஒரு­வ­ரது அழைப்­பா­கவோ அல்­லது அசாத் மெள­லா­னாவின் அழைப்­பா­கவோ கூட இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாகும்.

அத்­துடன் 2019 ஏப்ரல் 19 அன்று ஜமீல் தனது வீட்டை விட்டு வெளி­யே­று­கின்ற சிசி­டிவி காட்­சி­களை, 2019 ஏப்ரல் 21 அன்று மாலை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள் ஆய்வு செய்­துள்­ளனர். அத்­துடன் அந்தக் காட்­சிகள் அடங்­கிய டி.வி.ஆர் இயந்­தி­ரத்தை பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் அதி­கா­ரிகள் எடுத்துச் சென்­றுள்­ளனர். அவ்­வாறு எடுத்துச் செல்லும் போது 2019 மார்ச் 31 முதல் ஏப்ரல் 21 மாலை இயந்­திரம் அகற்­றப்­படும் வரை­யி­லான காட்­சிகள் பதி­வா­கி­யி­ருந்­துள்­ளது. எடுத்துச் செல்­லப்­பட்ட DVR-இல் இருந்து 2019 ஏப்ரல் 19, அன்று காலை 8:00 மணி முதல் 2019 ஏப்ரல் 21, அன்று பிற்­பகல் 2:30 மணி வரை­யி­லான காணொளிப் பதி­வுகள் மட்டும் இல்லை என்­பது ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. DVR எடுத்துச் செல்­லப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­ட­போது குறித்த வீடியோ காட்­சிகள் அழிந்­தி­ருக்­கலாம் என்று அதி­கா­ரிகள் ஆணைக் குழு முன் கூறி­யி­ருந்­தனர். ஆரம்­பத்தில் குறித்த காட்­சிகள் இருந்­துள்ள நிலையில், பின்னர் ஜமீல் வீட்டை விட்டு வெளி­யே­றிய நாளி­லி­ருந்து பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு அதி­கா­ரிகள் இயந்­தி­ரத்தை அகற்றும் வரை­யி­லான பகுதி மட்டும் அழிக்­கப்­பட்­டுள்­ளது. ஜமீலை வேவு­பார்த்த அல்­லது பின் தொடர்ந்த பயங்­க­ர­வாதம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வல்ல பிர­தான நிறு­வ­னமே பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு. எனவே அவர்­க­ளது இந்த நட­வ­டிக்கை மிக்க சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

2019 ஏப்ரல் 21, அன்று நடந்த தொடர் குண்­டு­வெ­டிப்புத் தாக்­கு­தல்­களின் சிறிது நேரத்­துக்கு பிறகு, இரா­ணுவ உளவுத் துறை பணிப்­பாளர், இரா­ணுவ உளவுத் துறை அதி­கா­ரிகள் குழுவை ஜமீலின் வீட்­டிற்கு அனுப்­பி­ய­தாக ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. அத்­துடன் எப­னிசர் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் ஜமீலைச் சோத­னை­யிட்ட தனியார் பாது­காப்பு அதி­கா­ரியை, புல­னாய்வு அதி­கா­ரிகள் தொலை­பே­சியில் அழைத்து, ஹேவ்லாக் புத்தர் சிலைக்கு அருகில் வரு­மாறு அறி­வு­றுத்­தி­ய­தா­கவும் ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. அந்த தனியார் பாது­காப்பு அதி­காரி அங்கு சென்­ற­போதும், சம்­பந்­தப்­பட்ட குழு­வினர் வரா­மையால், அவர்கள் ஆபத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்­களா என்ற சந்­தேகம் எழுந்­த­தா­கவும், அந்த‌ பாது­காப்பு அதி­காரி உட­ன­டி­யாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்குச் சென்­ற­தா­கவும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஜமீல் உறுப்­பி­ன­ராக இருந்த (மேலும் மூன்று குண்­டு­தா­ரிகள் உறுப்­பு­ரிமை வகித்த) ஜே.எம்.ஐ. அமைப்­புக்கு சுரேஷ் சலே உள­வுத்­துறை பணிப்­பா­ள­ராக இருந்த போது, இரா­ணுவ உளவுத் துறை முகவர் ஒரு­வரை அனுப்­பி­யுள்­ள­துடன், அந்த முக­வ­ருக்கு ஜே.எம்.ஐ. உறுப்­பி­ன­ராக இருந்­து­கொண்டு அந்த அமைப்பில் கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக வெளி­நாட்டு உள­வுத்­துறை ஒன்றின் ஒத்­து­ழைப்­புடன் இரா­ணுவ உள­வுத்­துறை பணிப்­பாளர் சபை­யினால் வீடொன்று பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருந்­த­தாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதில் சில கலந்­து­ரை­யா­டல்கள் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2018 டிசம்பரில் சஹ்ரான் இந்தியாவிற்கு பயணம் செய்ததாக இராணுவ உளவுத்துறை பணிப்பாளர் சபை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது.

இந்த அனைத்து விட­யங்­க­ளையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது, இலங்­கையின் தேசிய உளவுத்துறை மற்றும் இரா­ணுவ உளவுத்துறை ஆகி­யன சஹ்ரான் ஹாஷிமின் கும்பல் தொடர்பில் பூரண அறி­வுடன் செயற்­பட்­டி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் மிக அதிகம். அது மட்­டு­மல்­லாமல், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த தக­வல்­களை முன் கூட்­டியே நேர­டி­யாக அவர்கள் பெற்­றி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களும் மிக அதி­க­மாகும்.

அப்­ப­டி­யானால், இந்த உளவுத் துறைகள், தம் வசம் தக­வல்­களை வைத்­துக்­கொண்டும் குறித்த தாக்குதல்களை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காதது ஏன், யாரின் தேவைக்காக என்ற கேள்விக்கான பதிலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் காட்டப் போகும் மிகப் பெரும் சான்றாக அமையப் போகிறது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc