தோட்டத்தில் பொது முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரால் தாக்கப்பட்டுள்ள தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் திங்கட்கிழமை (27) அன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை மவுண்ட்வேர்ணன் தோட்ட தொழிற்சாலைக்கு முன்னால் திரண்ட தோட்ட சேவையாளர்கள், மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும், பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, க்ளீன் ஸ்ரீலங்கா போன்ற வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்க வேண்டுமானால் பக்கச்சார்பாக செயல்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதியே மேற்படி தாக்குதல் நடந்துள்ளது. பொது முகாமையாளரும், உதவி முகாமையாளரும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவரும் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதித்தலைவர் எஸ். இளையராஜா தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் கடந்தும், இது தொடர்பில் பொலிஸார் மந்தகதியிலேயே செயல்பட்டுள்ளனர் எனவும், இன்றைய தினமே சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமுகாமையாளர் தலைமறைவாகி இருப்பதற்கு பொலிஸார் உடந்தையாக இருந்தனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.