ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று (04) அது தொடர்பிலான முழு விபரங்களையும் அவர் சபையில் சமர்ப்பித்தார்.
கடந்த அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு 32 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் கிழக்கு மாகாணத்துக்கு 22 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் நாடு முழுவதிலும் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன் வைத்தே அவர் இதனை சமர்ப்பித்தார். கடந்த அரசில் அரசியல் இலஞ்சமாக பலருக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன அவற்றை அரசாங்கம் வெளியிடும் எனக் கூறியிருந்தோம். அதற்கமைய அந்த விபரங்களை சபைக்கு சமர்ப்பிப்பதன் மூலம் அதனை சகலரும் அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் தென் மாகாணத்தில் 48, வட மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45, வட மத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30, வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 என 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 02, கம்பஹா 08, களுத்துறை 08, காலி 09, மாத்தறை 05, அம்பாந்தோட்டை 05, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 02, மன்னார் 02, திருகோணமலை 04, மட்டக்களப்பு 01, அம்பாறை 05, கண்டி 11, மாத்தளை 06, நுவரெலியா 08, அனுராதபுரம் 04, பொலன்னறுவை 03, புத்தளம் 06, குருநாகல் 08, பதுளை 09, மொனராகலை 07, இரத்தினபுரி 06, கேகாலை 02 என 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவுக்கு இவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.