பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்!; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்றம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரது குழந்தையும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே நேற்று (19) மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் அவர் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை எனவும், அவர் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்த போதும் வைத்தியர்கள் இயற்கை முறையில் குழந்தையைப் பிரசவிக்க முயற்சி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் மரணம் அடைந்த விடயத்தை கூட நீண்ட நேரமாக தமக்குத் தெரிவிக்கவில்லை எனவும், கர்ப்பிணியின் உடலைப் பார்ப்பதற்குக் கூட பெற்றோரை வைத்தியசாலை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கர்ப்பிணியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் அவரது மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை அவரது உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமக்கு நீதி கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை எனத் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதேவேளை சம்பவ இடத்தில் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளரோ, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தரவில்லை எனவும் அவருடைய தொலைபேசியும் இயங்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்பதாகவும், தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம் பெற்ற மூன்றாவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc