கைது செய்யப்படுவதற்கான காரணத்தை கேட்பது ஒர் குற்றமா?

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி , இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தமது வாகனத்தில் குடும்பத்தினர் பயணித்துக்கொண்டிருந்த வேளை , அவர்களது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் முந்தி சென்றவர்கள் வாகனத்திற்கு முன்பாக தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில்,

நாங்கள் வாகனத்தில் பயணித்துக்கொண்டிந்த வேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எம்மை முந்தி சென்று விபத்துக்கு உள்ளானர்கள். அவர்கள் மதுபோதையில் இருந்தமையால், நாங்களும் வாகனத்தை நிறுத்தி விட்டு, இருந்தோம்.

அப்போது சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் சாரதி அனுமதி பத்திரம், வாகன ஆவணங்களை கேட்டிருந்தனர். சிவில் உடையில் உள்ள உங்களுக்கு அதனை காண்பிக்க தேவையில்லை. விபத்து நடந்துள்ள இடத்திற்கு போக்குவரத்து பிரிவு பொலிசாரை வரவழையுங்கள் என கூறினார்.

அதற்கு சிவில் உடையில் வந்திருந்தவர்கள் எனது கணவனை மூர்க்க தனமாக தாக்கினார்கள். அதனை தடுக்க சென்ற என்னையும் தாக்கி , எனது இரண்டு மாத குழந்தையையும் , என் கையில் இருந்து பிடுங்கி எறிந்தனர்.

பின்னர் சீருடையில் வந்த பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன் எனது கணவரையும் கைது செய்துள்ளனர் என தெரிவித்தார்.

அதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற சட்டத்தரணி மணிவண்ணன் , பார்த்தீபன் உள்ளிட்டோர் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக நின்றிருந்தனர்.

சட்டத்தரணி மணிவண்ணன் , பொலிஸ் நிலையத்தினுள் சென்று கைது செய்யப்பட்டிருந்தவரை பார்வையிட்டு , சம்பவம் தொடர்பில் நேரில் கெடடறிந்து கொண்டார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

மதுபோதையில் பொலிஸார் அராஜகம் செய்வது பாரதூரமான அடிப்படை மனிதவுரிமை மீறல் இந்த குற்றச்செயலை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து செயற்பட  சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை நேரில் பார்வையிட்டு , கேட்ட போது , தம்மை பொலிஸ் நிலையத்தினுள் வைத்தும் பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். இந்த சம்பவம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக பொலிஸ் நிலையம் முன்பாக நின்ற மக்களை பொலிஸ் நிலையம் முன்பாக இருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் பணித்து , மக்களை அங்கிருந்து விரட்ட முனைந்தனர்.

அதன் போது அங்கிருந்த யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் பொலிசாரிடம் நியாயம் கேட்க முற்பட்ட வேளை , அவரை போதையில் நின்று குழப்பம் விளைவிப்பதாக கூறி பொலிஸார் தாக்க முற்பட்டுள்ளனர்.

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி அராஜகமாக நடந்து கொண்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைக்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய அலுவலகமானது  சனிக்கிழமை (09) இலங்கை பதில் பொலிஸ்மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் திறந்து வைக்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc